செய்திகள்
சிபிஎஸ்இ தலைமை அலுவலகம்

பட்டியல் இன மாணவர்களுக்கு சிபிஎஸ்இ தேர்வு கட்டணம் 24 மடங்கு உயர்வு

Published On 2019-08-12 02:58 GMT   |   Update On 2019-08-12 02:58 GMT
சி.பி.எஸ்.இ. பட்டியல் இன மாணவர்களுக்கு 5 பாடங்களுக்கான தேர்வு கட்டணத்தை ரூ.50-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி உள்ளது.
புதுடெல்லி:

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான கட்டணத்தை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அதிரடியாக உயர்த்தி உள்ளது. அதன்படி, பட்டியல் இன மாணவர்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி.) 5 பாடங்களுக்கான தேர்வு கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது, 24 மடங்கு உயர்வாகும். அவர்களுக்கு கூடுதல் பாடத்துக்கு தேர்வு கட்டணம், முன்பு இல்லாமல் இருந்தது. தற்போது, கூடுதல் பாடத்துக்கு தலா ரூ.300 செலுத்த வேண்டும்.

அதுபோல், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வு கட்டணம் ரூ.750-ல் இருந்து ரூ.1,500 ஆக அதிகரித்துள்ளது. கூடுதல் பாடத்துக்கான தேர்வு கட்டணம், தலா ரூ.300 ஆகும். பார்வை திறனற்ற மாணவர்களுக்கு தேர்வு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பதிவு செய்த மாணவர்களுக்கான தேர்வு கட்டணம், ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கூடுதல் பாடத்துக்கான கட்டணம், ரூ.1,000-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களிடம் பழைய கட்டணப்படி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் ஏற்கனவே வசூலித்து விட்டன. புதிய கட்டணப்படி, பாக்கித்தொகையை வசூலிக்குமாறு அந்த பள்ளிகளை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. கடைசி தேதிக்குள், பாக்கித்தொகையை செலுத்தாத மாணவர்கள், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.

Tags:    

Similar News