செய்திகள்
குல்தீப் சிங் செங்கார்

உன்னாவ் கற்பழிப்பு வழக்கு: கைதான பா.ஜ.க., எம்.எல்.ஏ.வுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Published On 2019-08-09 11:40 GMT   |   Update On 2019-08-09 11:40 GMT
உத்தரபிரதேசம் மாநிலம், உன்னாவ் பகுதியில் சிறுமி கற்பழிப்பு வழக்கில் பிடிபட்டு பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:

உத்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, பா.ஜனதா எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மீது கற்பழிப்பு புகார் செய்தார்.

இது தொடர்பாக எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். அவரை கட்சியில் இருந்து நீக்கியதாக பாஜக தலைமை அறிவித்தது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட சிறுமி, தனது வக்கீல், உறவினர்களுடன் காரில் சென்ற போது லாரி மோதியதில் உறவுக்கார பெண்கள் 2 பேர் பலியானார்கள்.



சிறுமியும், வக்கீலும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து பாதிக்கப்பட்ட சிறுமியை கொல்ல நடந்த சதி என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்விவகாரம் குறித்து நேற்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது உன்னாவ் சிறுமி கற்பழிப்பு, விபத்து, மற்றும் அதன் தொடர்புடைய வழக்கு என மொத்தம் 5 வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உத்தரவிட்டது.

மேலும், சிறுமிக்கு உத்தரபிரதேச மாநில அரசு ரூ.25 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விபத்து தொடர்பான விசாரணையை 7 நாட்களில் சி.பி.ஐ. முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

உன்னாவ் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சிறுமி குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணத்தை உத்தரபிரதேசம்அரசு வழங்கியது. மேல் சிகிச்சைக்காக அந்த சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட குல்தீப் சிங் செங்காருக்கு எதிராக டெல்லி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கிரிமினல் குற்றப்பிரிவு 120பி, 363, 366, 376 மற்றும் ’போஸ்கோ’ சட்டத்தின் இதர பிரிவுகளின்கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மாஜிஸ்திரேட் தர்மேஷ் சர்மா பதிவு செய்து கொண்டார்.

Tags:    

Similar News