செய்திகள்
8 வழிச்சாலை - மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு தடையை நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் இன்று நிராகரித்துள்ளது.
புதுடெல்லி:
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து 8 வழிச்சாலை திட்ட இயக்குனர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. நிலத்தை எடுத்துக் கொள்ளாமல் சுற்றுச்சூழல் அனுமதி பெற முடியாது. இதனால் திட்டத்துக்கான நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறை முறையிட்டது.
இதையடுத்து 8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த ஐகோர்ட்டு விதித்த தடையை தற்போது நீக்க முடியாது. 8 வழிச்சாலைக்கு எத்தனை பேர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டை அணுகினார்கள்? இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை மத்திய நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதற்கிடையே, கடந்த 31ம் தேதி 8 வழிச்சாலையின் சிறப்பு அம்சங்கள் என்ன, அதன் பலன்கள் என்ன என்பது தொடர்பான விவரங்களை எழுத்துப்பூர்வமாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 8 வழிச்சாலைக்கு விதிக்கப்பட்ட தடையை இடைக்காலமாக நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது.
மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைக்கும் வரை எந்தவொரு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் எனவும் மத்திய அரசு
தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் வரும் 22-ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.