செய்திகள்
வெளிநடப்பு செய்வதால் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிக்கவில்லை - மம்தா பானர்ஜி
காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்ததால் அதை நாங்கள் ஆதரிப்பதாக கூற முடியாது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும்
370-வது அரசியல் சட்டத்தை ரத்து செய்தும்,
மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக
பிரிப்பதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
தெரிவித்து வருகின்றன.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு முன்பே
காஷ்மீரில் உள்ள மாநில கட்சிகளின் தலைவர்கள்
ஞாயிற்றுக்கிழமை மாலை பரூக் அப்துல்லா
வீட்டில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இதில்
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து
செய்தால் போராட்டம் நடத்துவது என முடிவு
எடுத்தனர்.
அன்று இரவே முன்னாள் முதல்-மந்திரிகளான
மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா
முப்தி, தேசிய மாநாடு கட்சி துணைத்தலைவர்
உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக்காவலில்
வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், காஷ்மீர் பிரச்சனை குறித்து இன்று
கருத்து தெரிவித்த மேற்கு வங்காளம் மாநில
முதல்வர் மம்தா பானர்ஜி, ’மக்களவையில் இருந்து
வெளிநடப்பு செய்வதால் நாங்கள் ஜம்மு-காஷ்மீர்
மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிக்கிறோம் என்று
அர்த்தமல்ல. நாங்கள் இதை முற்றிலும்
எதிர்க்கிறோம்.
இவ்விவகாரத்தில் மக்களவையில்
விவாதிக்காமலும், வாக்கெடுப்பு நடத்தாமலும்
முடிவெடுப்பது ஜனநாயகத்திற்கு
முரண்பாடானதாகும். மெஹபூபா முப்தி, உமர்
அப்துல்லா இருவரும் அரசியல் தலைவர்கள்
பயங்கரவாதிகள் அல்ல. எனவே அவர்கள்
இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்’
என வலியுறுத்தியுள்ளார்.