செய்திகள்
அமித் ஷாவுடன் பிரதமர் மோடி

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீடிக்குமா? - அமித் ஷாவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

Published On 2019-08-05 04:56 GMT   |   Update On 2019-08-05 04:56 GMT
ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
   புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக கிடைத்த உளவுத்துறை தகவலையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அமர்நாத் யாத்திரை, மச்சாயில் மாதா யாத்திரை உள்ளிட்ட யாத்திரைகள் ரத்து செய்யப்பட்டன.
 
மேலும், ஜம்மு காஷ்மீரில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்தார். இதை தொடர்ந்து சுமார் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேறியுள்ளனர்.
 
இதற்கிடையே, காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என 7 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.  இதையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

காஷ்மீரில் நிலவும் பதற்றம் தொடர்பாக டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நேற்று பிற்பகல் உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உள்துறை செயலாளர் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

இதே விவகாரம் தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா இல்லத்தில் அரசியல் கட்சி  தலைவர்கள் நேற்று மாலை அவசரமாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அம்மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரிகள் உமர் அப்துல்லா,  மெஹ்பூபா முப்தி மற்றும் பல்வேறு முக்கிய அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

இதற்கிடையில், ஸ்ரீநகர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலானது.  மறுஉத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காஷ்மீரில் மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது,  அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   இதன் காரணமாக காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவுகின்றது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட இதர மந்திரிகளும் பங்கேற்றுள்ளனர்.



ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து தொடர்பான விவகாரம் மற்றும் அம்மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பாக நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உள்துறை செயலாளருடன் விவாதித்தது பற்றி பிரதமரிடம் அமித் ஷா விளக்கினார்.

இந்த ஆலோசனை முடிந்ததும் 11 மணியளவில் பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும். பிரதமருடன் இன்று நடத்திய ஆலோசனையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்துறை மந்திரி அமித் ஷா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
Tags:    

Similar News