செய்திகள்
ச்பாநாயகரிடம் கடிதம் அளிக்கும் எம்எல்ஏ

மகாராஷ்டிராவில் காங்., தேசியவாத காங்கிரசின் 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா - பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்

Published On 2019-07-31 03:15 GMT   |   Update On 2019-07-31 03:15 GMT
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இன்று பா.ஜ.க.வில் இணைகின்றனர்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது.

இதற்கிடையே, மகாராஷ்டிரா சட்டசபைக்கு வரும் அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கியதை தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசை சேர்ந்த தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளில் ஐக்கியமாகி வருகின்றனர்.

குறிப்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த காங்கிரசை சேர்ந்த ராதாகிருஷ்ண வி.கே.பாட்டீல் கடந்த மாதம் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். பா.ஜனதா கூட்டணி அரசில் அவருக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது.

இதேபோல், தேசியவாத காங்கிரசை சேர்ந்த பீட் தொகுதி எம்.எல்.ஏ. ஜெய்தத் சிர்சாகர், சகாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பண்டுரங் வரோரா ஆகியோரும் சமீபத்தில் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு சிவசேனாவில் இணைந்தனர்.மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மும்பை தலைவர் சச்சின் அஹிர் சமீபத்தில் சிவசேனாவில் சேர்ந்தார்.



இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மும்பை வடாலா தொகுதி எம்.எல்.ஏ. காளிதாஸ் கோலம்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைபவ் பிச்சாத் (அகோலா தொகுதி), சிவேந்திர ராஜே போசலே (சத்தாரா), சந்தீப் நாயக் (ஐரோலி) ஆகியோரும் தஙகளது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்கள் சபாநாயகர் ஹரிபாவு பாகடேவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.

பதவி விலகிய எம்.எல்.ஏ.க்கள் 4 பேரும் இன்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மகாரஷ்டிரா பா.ஜ.க. தலைவரும், மந்திரியுமான சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இன்று இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News