செய்திகள்
ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் - கர்நாடக அரசியல் குறித்து மாயாவதி கருத்து
கர்நாடகா மாநிலத்தில் நிலவும் அரசியல் தொடர்பாக கருத்து கூறிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என்றார்.
லக்னோ:
கர்நாடகா சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அவருக்கு ஆதரவாக 99 வாக்குகளும், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 105 வாக்குகளும் கிடைத்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் அளித்த ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வுஜூபாய் வாலா ஏற்றுக் கொண்டார்.
இதற்கிடையே, கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காத பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ மகேஷை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இதையடுத்து, கர்நாடகாவில் ஆட்சியமைப்பதற்கான வேலைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. நான்காவது முறையாக முதல் மந்திரி பதவியேற்பார் என அம்மாநில பாஜக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் நிலவும் அரசியல் தொடர்பாக கருத்து கூறிய பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயம் என தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அதிகாரம் மற்றும் பணபலத்தால் பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றுள்ளது. இது ஜனநாயக வரலாற்றின் இருண்ட அத்தியாயம் என பதிவிட்டுள்ளார்.