செய்திகள்
பிறந்த குழந்தை

ஆஸ்பத்திரியில் பிறந்த ஒரு குழந்தைக்கு தந்தை என்று உரிமை கொண்டாடிய 3 வாலிபர்கள்

Published On 2019-07-24 05:16 GMT   |   Update On 2019-07-24 06:37 GMT
மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தந்தை என்று 3 வாலிபர்கள் உரிமை கொண்டாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம் தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சனிக்கிழமை 21 வயதான கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார்.

அவருடன் வந்த வாலிபர் தன்னை பெண்ணின் கணவர் என்றும் பிறக்கப் போகும் குழந்தைக்கு தந்தை என்றும் கூறி ஆஸ்பத்திரியில் முன் தொகை செலுத்தினார். பின்னர் அந்த பெண் ஆபரே‌ஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் இரண்டாவதாக ஒரு வாலிபர் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர், குழந்தை பெற்ற இளம்பெண் எனது மனைவி. அந்த குழந்தை எனக்கு பிறந்தது என உரிமை கொண்டாடினார். இதனால் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏற்கனவே ஒரு வாலிபர் ஆஸ்பத்திரி ஆவணங்களில் தன்னை அந்த பெண்ணின் கணவர் என கூறி கையெழுத்திட்டு பணம் கட்டிய விவரத்தை கூறினர்.

இதைக் கேட்ட 2-வது வாலிபர் ஆஸ்பத்திரி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆஸ்பத்திரி மேலாளர் போலீசில் புகார் செய்தார்.

போலீஸ் விசாரணையில், இரண்டாவதாக வந்த வாலிபர் இளம்பெண்ணுடன் தனக்கு நடந்த திருமணத்திற்கான சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை காட்டினார். அவற்றை பார்த்த போலீசார் இவர்தான் பெண்ணின் கணவர் என்று முடிவு செய்தனர்.

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை 3-வதாக ஒரு வாலிபர் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் நான் அந்த பெண்ணின் கணவர் அல்ல, ஆனால் அவருக்கு பிறந்த குழந்தை என்னுடையது, நான் தான் அந்த குழந்தைக்கு தந்தை என உரிமை கொண்டாடினார். இதனால் மீண்டும் குழப்பம் நிலவியது.

இதுதொடர்பாக போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது 2-வதாக வந்த வாலிபர் தான் எனது கணவர், அவர் தான் குழந்தைக்கு தந்தை என்று பெண் கூறினார்.

அந்த பெண்ணும், வாலிபரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தபோது நெருக்கமாக பழகி உள்ளனர். இது வாலிபரின் குடும்பத்துக்கு தெரிய வந்ததும் அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இளம்பெண் கர்ப்பமடைந்துள்ளார். இதனால் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதலியை கரம் பிடிக்க வாலிபர் தயக்கம் காட்டியுள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த இளம்பெண் காதலன் மீது போலீசில் கற்பழிப்பு புகார் கொடுக்கவும், போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். அதன்பிறகு தான் இளம்பெண்ணுடன் மற்ற வாலிபர்கள் பழகி உள்ளனர். அவர்களுடன் இளம்பெண் நட்பாக பழகி வந்த நிலையில் அவரது பிரசவ காலமும் நெருங்கி வந்தது. இதற்கிடையே பெண்ணின் காதலன் ஜெயிலில் இருந்து வெளியே வந்துவிட்டான்.

கடந்த சனிக்கிழமை அவர் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டு, குழந்தை பிறந்ததும், குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் புரொபைலாக வைத்துள்ளார்.

இதைப்பார்த்து அவரது காதலன் ஆஸ்பத்திரிக்கு வந்தபோதுதான் ஏற்கனவே ஒரு வாலிபர் பெண்ணின் கணவர் என கூறியதை அறிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

முடிவில் பெண்ணின் கணவர் மற்றும் குழந்தையின் தந்தை 2-வதாக வந்த வாலிபர் என்பதை உறுதி செய்த போலீசார் அவரை மட்டும் பெண்ணுடன் தங்கி இருக்க சம்மதித்தனர். மற்ற 2 வாலிபர்களையும் ஆஸ்பத்திரியில் இருந்து துரத்தி பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
Tags:    

Similar News