லாலு, அகிலேஷ் யாதவுக்கு பாதுகாப்பு குறைப்பு - மத்திய அரசு
புதுடெல்லி:
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வி.ஐ.பி.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கவர்னர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வி.ஐ.பி. அரசியல்வாதிகளுக்கும், வழங்கப்படும் மத்திய பாதுகாப்பை உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது.
அதன்படி பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டீரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு வி.ஐ.பி. பாதுகாப்பு திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது.
மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத் தற்போது உடல் நல குறைவால் ஜார்க்கண்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு அவருக்கு வழங்கப்பட்டு வந்த மத்திய அரசின் இசட் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. அவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பும் விலக்கப்பட்டுள்ளது. அவர்கள் மத்திய பாதுகாப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதேபோல் பா.ஜனதா எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி, முன்னாள் எம்.பி.க்கள் கீர்த்தி ஆசாத், சத்ருகன்சின்கா, இமாச்சல பிரதேச கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார், முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, 2 பேத்திகள், ஒரு பேரன், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் மகள், பேரன் உள்பட மாநில அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் உள்பட 130 பேருக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு இருக்கிறது.