செய்திகள்
மக்களவை

மோடி பதில் அளிக்காததால் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Published On 2019-07-23 07:51 GMT   |   Update On 2019-07-23 07:51 GMT
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டிரம்ப் பேசியது குறித்து பிரதமர் பதில் அளிக்காததால் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி:

காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடி கேட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அப்படி எந்த கோரிக்கையையும் டிரம்பிடம் பிரதமர் மோடி வைக்கவில்லை என இந்தியா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டது. 

எனினும் இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி முழக்கமிட்டதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. 



இது தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். ஆனால், அதனை ஏற்காமல் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. 

இதேபோல் மக்களவையிலும் பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் பதில் அளிக்காததால் அதிருப்தி அடைந்த அவர்கள், அவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
Tags:    

Similar News