செய்திகள்
கோழிக்கோட்டில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரம் கோவிலை மழை வெள்ளம் சூழந்து உள்ள காட்சி.

கேரளாவில் மழை தீவிரம் - 1,500 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம்

Published On 2019-07-23 06:54 GMT   |   Update On 2019-07-23 06:54 GMT
கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த 1,519 பேர் மாநிலம் முழுவதும் உள்ள 26 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கியது. முதலில் சரியான மழை பெய்யாத நிலை நிலவியது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மாநிலம் முழுவதும் மழை தீவிரம் அடைந்து உள்ளது.

கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த மாவட்டங்களில் கனமழை நீடிக்கிறது. இதனால் இங்கு உள்ள அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. மேலும் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

மழை காரணமாக இந்த மாவட்டங்களில் ஏராளமான மரங்கள் சாலைகளில் சாய்ந்து கிடப்பதால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது.

கண்ணூர், காசர்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இங்கு 24 மணிநேரமும் மீட்பு குழுவினர் மீட்புபணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.



கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கு இன்று ‘ரெட் அலர்ட்’ விடப்பட்டு உள்ளது. அதேப்போல மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடப்பட்டு உள்ளது. மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். மாநிலம் முழுவதும் உள்ள 26 முகாம்களில் 1,519 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News