செய்திகள்
அமர்நாத் யாத்ரீகர்கள் மேலும் 6 பேர் உயிரிழப்பு - இந்த ஆண்டில் பலி 22 ஆக உயர்வு
அமர்நாத் யாத்திரைக்கு சென்ற மேலும் 6 பக்தர்கள் கடந்த 4 நாட்களில் உயிரிழந்ததால் இந்த ஆண்டு யாத்திரை காலத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் ஆலயத்தில் ஆண்டுதோறும் குகைக்குள் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
அவ்வகையில், இந்த ஆண்டின் யாத்திரை காலம் கடந்த ஜூன் 30-ம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 15-ம் தேதியுடன் முடிவடையும் இந்த யாத்திரையில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர்.
யாத்திரைக்கு வந்த இடத்தில் உடல்நலக்குறைவு மற்றும் மிக உயரமான மலைப்பகுதியில் பிராணவாயு பற்றாக்குறையால் அடுத்தடுத்து 16 பேர் உயிரிழந்திருந்தனர். இவர்களின் இருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், மேலும் இருவர் யாத்ரீகர்களுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்களாக சேவை செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த 4 நாட்களில் மேலும் 6 பக்தர்கள் உயிரிழந்ததால் இன்றைய நிலவரப்படி இந்த ஆண்டு யாத்திரை காலத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.