செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

இது அந்த வீடியோ கிடையாது - வைரல் பதிவுகளின் உண்மை இதுதான்

Published On 2019-07-18 06:50 GMT   |   Update On 2019-07-18 06:50 GMT
மும்பையின் டோங்கிரியில் எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவின் உண்மை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
 


மும்பையின் டோங்கிரி பகுதியில் ஜூலை 16 ஆம் தேதி அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. கட்டிடத்திற்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்திருக்கிறது. 100 ஆண்டுகள் பழைமையான அடுக்குமாடி கட்டிடம் சமீபத்தில் பெய்த மழையில் சேதமடைந்து இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த கட்டிடம் இடிந்து விழும் காட்சிகள் என கூறும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. ஃபேஸ்புக்கில் இதுதொடர்பான பதிவில், 'மும்பையின் டோங்கிரி பகுதியில் இடிந்து விழும் கட்டிட காட்சிகள். இதுவரை இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர், ஒன்பது பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கட்டிட விபத்துக்கு பின் நடைபெறும் மீட்பு பணிகளின் வீடியோவை காணலாம்,' எனும் தலைப்பிடப்பட்டுள்ளது. 

வீடியோ ஃபேஸ்புக் மட்டுமின்றி ட்விட்டரிலும் அதிகம் பகிரப்படுகிறது. வைரல் வீடியோவை ஆய்வு செய்ததில், இது டோங்கிரி பகுதியில் ஏற்பட்ட விபத்தின் போது எடுக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. உண்மையில் இந்த வீடியோ தானேவில் எடுக்கப்பட்டதாகும். 



இதே வடியோ பென்டி பஜார் பகுதியில் ஏற்பட்ட கட்டிட விபத்து எனும் தலைப்பில் 2017 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. உண்மையில் இதே வீடியோ 2013, செப்டம்பர் 21 ஆம் தேதி பல்வேறு செய்தி சேனல்களில் வெளியாகியிருக்கிறது.

அந்த வகையில் இந்த வீடியோ மும்பையின் தானேவில் பனூ மேன்சன் பகுதியில் செப்டம்பர் 21, 2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட கட்டிட விபத்தின் போது எடுக்கப்பட்டதாகும். இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். இணைய தேடல்களில் தற்சமயம் வைரலாகும் வீடியோ 2013 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது உறுதியாகியிருக்கிறது. அந்த வகையில் வைரல் வீடியோக்கள் பொய் என்பது தெளிவாகிறது. 

இதுபோன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோக்களை நம்பி, அவற்றை பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதே நல்லது. ஒருவேளை பகிர நினைப்போர் அவற்றின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்து, பின் அவற்றை பகிர்ந்து கொள்வது வீண் குழப்பத்தை தவிர்க்க உதவும். 

போலி செய்திகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் போலி செய்தியின் பாதிப்பால் உயிரிழந்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கிறது. சமூக வலைத்தளத்தில் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ளும் முன் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்வது வீண் பதற்றத்தை தவிர்க்க உதவும்.
Tags:    

Similar News