செய்திகள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்

100 நாள் வேலை திட்டம் தொடராது? - மத்திய அரசு சூசகம்

Published On 2019-07-18 03:57 GMT   |   Update On 2019-07-18 03:57 GMT
100 நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்படும் என மக்களவையில் மத்திய மந்திரி சூசகமாக கூறியுள்ள நிலையில், அந்த திட்டத்தின் வேலை நாட்களை உயர்த்த வேண்டும் என மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுடெல்லி:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (100 நாள் வேலை திட்டம்) தொடராது என மத்திய அரசு சூசகமாக கூறியுள்ளது.

பாராளுமன்ற மக்களவையில் விவசாயத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகள் தொடர்பான மானிய கோரிக்கை விவாதங்கள் நேற்று நடந்தன. இதில் முக்கியமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (100 நாள் வேலை திட்டம்) நடப்பு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு இருப்பதாக பல்வேறு உறுப்பினர்கள் கவலை வெளியிட்டனர்.

இந்த விவாதங்களுக்கு மத்திய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பதிலளித்து பேசினார். அப்போது அவர் 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும் என சூசகமாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நாங்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டமாக முன்னேற்றி இருக்கிறோம். தற்போது இந்த திட்டத்தின் கீழ் 99 சதவீத தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை நேரடியாக வங்கி கணக்கிலேயே பெற்று வருகிறார்கள். இதில் இடைத்தரகர் தொல்லை இல்லை.

இந்த திட்டத்துக்கான ஒட்டுமொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டை பொறுத்தவரை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் கோடி அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது கடந்த 2018-19-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.55 ஆயிரம் கோடியாக இருந்த இந்த திட்ட நிதி, இந்த ஆண்டு ரூ.60 ஆயிரம் கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஏழைகளுக்கானது என்பதால், இந்த திட்டத்தை என்றென்றைக்கும் தொடர அரசுக்கு விருப்பம் இல்லை. இதை நீண்ட காலத்துக்கு தொடர எனக்கும் விருப்பம் இல்லை. ஏனெனில் இது ஏழைகளுக்கானது. மோடி அரசின் மிகப்பெரிய லட்சியமே நாட்டில் இருந்து வறுமையை அகற்றுவதுதான். அதை நோக்கியே செயல்பட்டும் வருகிறது.

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அவர்களுக்கு ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு அரசும் கடனுதவிகளை வழங்கி இருக்கிறது. இந்த கடனை குறித்த காலத்தில் அவர்கள் கட்டி வருகின்றனர்.

பெரும் கோடீசுவரர்களின் (கார்பரேட்) வாராக்கடன் அளவு குறித்து இந்த அவைக்கு நன்கு தெரியும். ஆனால் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் வாராக்கடன் அளவு வெறும் 2.7 சதவீதமே உள்ளது.

இவ்வாறு நரேந்திர சிங் தோமர் கூறினார்.

காங்கிரஸ் அரசின் கனவுத்திட்டங்களில் ஒன்றான 100 நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்படும் என மக்களவையில் மத்திய மந்திரி சூசகமாக கூறியுள்ள நிலையில், அந்த திட்டத்தின் வேலை நாட்களை 100-ல் இருந்து 200 ஆக உயர்த்த வேண்டும் எனவும், அதற்கான ஊதியத்தை ரூ.300 ஆக அதிகரிக்க வேண்டும் எனவும் மாநிலங்களவையில் நேற்று பல்வேறு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News