செய்திகள்
முதல்-மந்திரி குமாரசாமி

கர்நாடகத்தில் குமாரசாமி அரசு தப்புமா?- சட்டசபையில் இன்று பலப்பரீட்சை

Published On 2019-07-18 02:03 GMT   |   Update On 2019-07-18 02:03 GMT
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் 16 பேரின் ராஜினாமா விவகாரத்தில், சபாநாயகர் சுதந்திரமாக முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த நிலையில், குமாரசாமி அரசு தப்புமா? என்பது சட்டசபையில் இன்று நடைபெறும் பலப்பரீட்சையின் போது தெரிந்துவிடும்.
புதுடெல்லி:

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசு பதவி ஏற்றதில் இருந்தே பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

மந்திரி பதவி கிடைக் காத எம்.எல்.ஏ.க்கள் அவ்வப்போது தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருவதாலும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா, அரசை கவிழ்ப்பதற்காக அவ்வப்போது காய்களை நகர்த்தி வருவதாலும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முதல்-மந்திரி குமாரசாமி எப்போதும் மிகுந்து எச்சரிக்கையுடனேயே இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் அலுவலகத்தில் தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்துவிட்டு பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக திரும்பினார்கள். ஆனால் அவற்றை சபாநாயகர் ரமேஷ்குமார் இதுவரை ஏற்கவில்லை. அத்துடன் மந்திரிகளாக இருந்த இரு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதீய ஜனதா பக்கம் சாய்ந்தனர்.

இதற்கிடையே, தங்கள் ராஜினாமா கடிதங்களை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிடக் கோரி 15 எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை கடந்த 12-ந் தேதி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது 16-ந் தேதி வரை எந்த முடிவும் எடுக்கக்கூடாது என சபாநாயகருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் நேற்று முன்தினம் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-

கர்நாடக சட்டசபையில் 18-ந் தேதி (இன்று) முதல்-மந்திரி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்போவதாக கூறப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒரு சமநிலையான முடிவை எட்டும் வகையில் இடைக்கால உத்தரவு ஒன்றை பிறப்பிக்க வேண்டி இருக்கிறது. கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவோ அல்லது தெரிவிக்கும் கருத்தோ சபா நாயகரை கட்டுப்படுத்துவதாக இருக்கக்கூடாது. எனவே 15 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம்.

அரசியல் சட்டம் அளித்துள்ள அதிகாரத்தின் அடிப்படையில் சபாநாயகர் உரிய முடிவை எடுக்க எவ்வித தடையும் இல்லை. 15 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா குறித்து சபாநாயகர் முடிவு எடுத்த பின், அதுபற்றி இந்த கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அதேசமயம், இந்த கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு 15 எம்.எல்.ஏ.க்களையும் கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்கள் விரும்பினால் சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்கலாம் அல்லது விலகியும் இருக்கலாம்.

இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள மற்ற விஷயங்கள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை கர்நாடக சட்டசபை சபாநாயகர் ரமேஷ்குமார் வரவேற்று இருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு மீது தான் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்து இருப்பதாகவும், நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின்படி செயல்படப்போவதாகவும் தெரிவித்தார். அத்துடன், 15 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மீது முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை என்ற போதிலும், இஷ்டம் போல் காலம் தாழ்த்தும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், திட்டமிட்டபடி சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும், இதில் கலந்து கொள்ளுமாறு எம்.எல்.ஏ.க்களை தான் வற்புறுத்தப்போவது இல்லை என்றும் தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து முதல்-மந்திரி குமாரசாமி, சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், கிருஷ்ண பைரேகவுடா ஆகியோர் சபாநாயகர் ரமேஷ்குமாரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.

இதேபோல் முன்னாள் முதல்-மந்திரியும், மாநில பாரதீய ஜனதா தலைவருமான எடியூரப்பாவும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்று உள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கிடைத்த தார்மீக வெற்றி என்று கூறிய அவர், சட்டசபையில் முதல்-மந்திரி குமாரசாமிக்கு மெஜாரிட்டி இல்லாததால் அவர் இன்று ராஜினாமா செய்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.



சுப்ரீம் கோர்ட்டு தற்போது பிறப்பித்து இருப்பது இடைக்கால உத்தரவுதான் என்றும், சபாநாயகரின் அதிகாரம் குறித்து பின்னர் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கப் போவது இல்லை என்று அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அறிவித்து உள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடக சட்டசபையில் இன்று பலப்பரீட்சை நடக்கிறது. ஏற்கனவே அறிவித்தபடி முதல்-மந்திரி குமாரசாமி இன்று சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். இதற்காக காலை 11 மணிக்கு சட்டசபை கூடுகிறது. குமாரசாமி தாக்கல் செய்யும் நம்பிக்கை தீர்மானத்தின் மீது முதலில் உறுப்பினர்கள் விவாதம் நடைபெறும். அதன்பிறகு குமாரசாமி பதில் அளித்து பேசுவார்.

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு தற்போதைய நிலவரப்படி ஒரு பகுஜன் சமாஜ் உறுப்பினரின் ஆதரவையும் சேர்த்து (சபாநாயகர் நீங்கலாக) மொத்தம் 117 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. 105 உறுப்பினர்களை கொண்ட பாரதீய ஜனதாவுக்கு இரு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவிப்பதால், அதன்பலம் 107 ஆக உயர்ந்து இருக்கிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையில் மொத்தம் உள்ள 224 உறுப்பினர்களும் ஆஜராகி இருந்தால் மெஜாரிட்டியை நிரூபிக்க குமாரசாமிக்கு 113 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 15 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா மற்றும் வழக்கு தொடராத ஒரு எம்.எல்.ஏ.வின் ராஜினாமா என 16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆக குறைந்துவிடும். அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் அவருக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கும். எனவே அவரால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது.

எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்காவிட்டாலும், அவர்கள் இன்று சட்டசபைக்கு வர வாய்ப்பு இல்லை. எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அரசுக்கு மெஜாரிட்டி பலம் கிடைக்காது.

இதனால் சட்டசபையில் இன்று நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முடித்ததும் முதல்-மந்திரி குமாரசாமி ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவரது தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி தப்புமா? என்பது இன்று தெரிந்துவிடும்.
Tags:    

Similar News