செய்திகள்
ராபர்ட் வதேரா

சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் வதேரா பதில் அளிக்க 2 வாரம் அவகாசம்

Published On 2019-07-17 09:32 GMT   |   Update On 2019-07-17 09:32 GMT
சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ராபர்ட் வதேரா பதில் அளிக்க 2 வாரம் அவகாசம் அளித்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தியின் மருமகன் ராபர்ட்வதேரா.

ராகுல் காந்தியின் மைத்துனரான இவர் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு இருக்கிறது.

லண்டனில் சட்ட விரோதமாக சொத்துக்கள் வாங்கியது தொடர்பாக ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதே போல ராஜஸ்தான் மாநிலத்தில் நிலங்கள் வாங்கியது தொடர்பாகவும் அவர் மீது வழக்குகள் இருக்கிறது.

சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ராபர்ட் வதேராவிடம் அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி இருந்தது.

இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க அவர் முன்ஜாமீன் பெற்று இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி விசாரணை கோர்ட்டு அவருக்கு முன்ஜாமீன் வழங்கி இருந்தது.

ராபர்ட் வதேரா விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார், அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். இதனால் அவரது முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி அமலாக்கத்துறை டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதி சந்தர் சேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறையின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு வதேராவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வதேரா தரப்பில் அமலாக்கத்துறை மனுவுக்கு பதில் அளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.

இது தொடர்பாக அவரது வக்கீல் கூறும் போது “கோர்ட்டு நோட்டீஸ் வந்த போது ராபர்ட் வதேரா வெளிநாட்டில் இருந்தார். கடந்த 11-ந்தேதி தான் அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பினார். இதனால் அமலாக்கத்துறை மனுவுக்கு பதில் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இதை ஏற்ற டெல்லி ஐகோர்ட்டு பதில் அளிக்க 2 வார காலம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. இந்த வழக்கு செப்டம்பர் 26-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

Similar News