செய்திகள்
தமிழக தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும்- சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

Published On 2019-07-17 05:48 GMT   |   Update On 2019-07-17 05:48 GMT
உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு அக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரி தி.மு.க. மற்றும் பொது நல அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அந்த காலக்கெடுவுக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக கூடுதல் அவகாசம் கேட்டது.

வாக்காளர் பட்டியலை தயார் செய்யும் நடைமுறை முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும் என்றும், பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த முடியாது என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து இருந்தது.

பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு உள்ளாட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியது. முதல் கட்டமாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான விதிமுறை வெளியிடப்பட்டது. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் பிரிக்கும் பணி நடைபெற்றது.

இதனிடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அக்டோபர் 31-ந்தேதிவரை அவகாசம் அளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் அக்டோபர் மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் நடைபெறாது.


இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த உத்தரவிடக் கோரி ஜெய்சுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையத்துக்கு மேலும் கால அவகாசத்தை நிராகரிக்க வேண்டும் என்றும், உடனடியாக தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் அக்டோபர் மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தது. தமிழக தேர்தல் ஆணையத்தின் உறுதிமொழியை ஏற்று சுப்ரீம்கோர்ட்டு இந்த வழக்கை முடித்து வைத்தது.
Tags:    

Similar News