செய்திகள்
வேலூர் தொகுதி தேர்தல் செலவு கண்காணிப்பு சிறப்பு அதிகாரி நியமனம்
வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக முரளிகுமாரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:
வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், வருமான வரித்துறையினர் தனியாக குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, நேற்று வரை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலைகண்காணிப்பு குழுக்கள் நடத்திய வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.44 லட்சத்து 32 ஆயிரத்து 200ம், வாணியம்பாடியில் ரூ.89,41,800 மதிப்புள்ள தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் செலவு கண்காணிப்பு சிறப்பு அதிகாரியாக முரளிகுமாரை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இவர் சென்னை வருமான வரி இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.