செய்திகள்
எடியூரப்பா

முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்வார்- எடியூரப்பா

Published On 2019-07-16 02:03 GMT   |   Update On 2019-07-16 02:03 GMT
நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு தோல்வி அடையும் என்றும், முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்வார் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு :

பெங்களூரு விதானசவுதாவில் பா.ஜனதா மாநில தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மாநிலத்தில் கூட்டணி அரசில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் 2 பேரும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றுள்ளனர். கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. முதல்-மந்திரி குமாரசாமியே நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என்று கூறி இருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ஜனதா கூறவில்லை. முதல்-மந்திரி கூறியதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று (நேற்று) நடத்த வேண்டும் என்று சபாநாயகரிடம் கூறினோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, சட்ட விதிமுறைகளின்படி வருகிற 18-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகரின் முடிவை வரவேற்கிறேன். அவரது பேச்சுக்கு மதிப்பளித்து 18-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பா.ஜனதாவும் சம்மதம் தெரிவித்துள்ளது.



நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை சட்டசபை கூட்டத்தை நடத்த கூடாது என்று சபாநாயகரிடம் கேட்டு கொண்டோம். அதனை ஏற்றுக் கொண்டு சட்டசபை கூட்டத்தையும் சபாநாயகர் ஒத்திவைத்திருக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு வெற்றி பெற சாத்தியமே இல்லை. வருகிற 18-ந் தேதி நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கூட்டணி அரசு தோல்வி அடையும். அன்றைய தினம் முதல்-மந்திரி பதவியை குமாரசாமி ராஜினாமா செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

ராஜினாமா செய்துள்ள எம்.எல்.ஏ.க்கள் தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டு நாளை(இன்று) வழங்கும் தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ரெசார்ட் ஓட்டலிலேயே தங்கி இருப்பார்கள்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Tags:    

Similar News