செய்திகள்
சந்திரபாபு நாயுடு - ஜெகன் மோகன் ரெட்டி

சட்டசபையில் சேலஞ்ச் விட்ட சந்திரபாபு நாயுடு..கர்ஜித்த ஜெகன் மோகன் ரெட்டி -பளீர் பதிலடி

Published On 2019-07-12 07:46 GMT   |   Update On 2019-07-12 07:46 GMT
ஆந்திர மாநிலத்தின் சட்டசபையில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு விட்ட சேலஞ்சை ஏற்று ஜெகன் மோகன் ரெட்டி பளீர் பதிலடி கொடுத்துள்ளார்.
அமராவதி:

ஆந்திர மாநிலத்தில் முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றது முதலே, துணிச்சலான மற்றும் மக்களுக்கு பயன்தரும் வகையில் நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி ஒவ்வொன்றாக செயல்படுத்தியும் வருகிறார்.

அவரது பேச்சுத்திறன் மற்றும் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை காக்கும் குணத்தால் ஆந்திர மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டார் என சமூக வலைத்தளங்களிலும், பல்வேறு அமைப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சட்டசபையில் பட்ஜெட் மற்றும் விவசாயிகளின் குறைகள்  தொடர்பான விவாதங்கள் எழுந்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க இருப்பதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தவறாக கூறியுள்ளார் என உரிமை மீறல் தீர்மான நோட்டீசைக் கொண்டு வந்தனர்.

பின்னர் சந்திரபாபு நாயுடு இந்த தீர்மானத்திற்கு ஜெகன்மோகன் ரெட்டி சரியான விளக்கம் அளித்தால் தான் பதவி விலக தயார் என கூறினார். இதனையடுத்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அந்த நோட்டீசுக்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்தபோது தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.



இதனையடுத்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஓங்கி குரல் கொடுத்தார். சற்று நேரம் சட்டசபை அமளியானது. அதன்பின்னர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசியதாவது:

மோசமான பருவநிலை மாற்றத்தால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட முந்தைய சந்திரபாபு அரசு நிதியாக வழங்கவில்லை. பயிர்களுக்கான விதைகளை கொள்முதல்கூட செய்யவில்லை.

இது மிகவும் மோசமான சூழல். நவம்பர் மாதத்தில் விதை கொள்முதல் செய்ய தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடிக்க வேண்டும். நாங்கள் பதவி ஏற்றபோது அந்த விதைகள் விற்பனைக்கே அனுப்பியிருக்க வேண்டும்.

ஆனால், முந்தைய அரசின் அலட்சியத்தால் 50 குவிண்டால் அளவுதான் விதைகள் இருக்கின்றன. மேலும் முந்தைய அரசு தரவேண்டிய உள்நாட்டு மானியமான ரூ.2000 கோடியை நாங்கள் விரைவில் வழங்குவோம்.

முந்தைய அரசு பண்ணை கடன் மறுசீரமைப்பு மற்றும் வட்டி தள்ளுபடி ஆகியவை குறித்து சிந்திக்க கூட இல்லை. அன்றைய தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியில் ரூ.87,612 கோடி தள்ளுபடி செய்வதாக கூறினார். அதையும் செய்யவில்லை.

பண்ணை குறித்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சொன்னபடி விரைவில் தீர்வு காணப்படும். கடன்களை முறையாக திருப்பிக் கட்டிவரும் விவசாயிகளின் வட்டி நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும்.

நாங்கள் இப்போது அளித்த 9 மணி நேரம் இலவசமாக மின்சாரம் வழங்கியுள்ளோம். இதற்காக ரூ.1700 கோடி செலவிடுகிறோம். மாநிலத்தில் 60% விவசாயிகளுக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது.

அடுத்த ஜூன் மாதத்திற்குள் மீதமுள்ள 40% விவசாயிகளுக்கு 9 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவிடும். இலவச பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் விலை உறுதிப்படுத்தும் நிதியாக விவசாயிகளுக்கு ரூ.3000 கோடி வழங்க உள்ளது.

எண்ணெய் பனை விவசாயிகளுக்காக ரூ.80 கோடி ஒதுக்க உள்ளோம். இதனால் 1.1 லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள். மேலும் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு ரூ.7 லட்சம் நிதியாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 







 
Tags:    

Similar News