செய்திகள்
அதிருப்தி எம்எல்ஏக்கள்

சுப்ரீம் கோர்ட் உத்தரவு - கர்நாடக சபாநாயகர் முன் ஆஜரான அதிருப்தி எம்எல்ஏக்கள்

Published On 2019-07-11 13:08 GMT   |   Update On 2019-07-11 13:08 GMT
சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, ராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு இன்று மாலை நேரில் ஆஜராகினர்.
பெங்களூர்:

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால் முதல்வர் குமாரசாமிக்கு சட்டசபையில் மெஜாரிட்டி பலம் இல்லாத நிலை உருவாகி இருக்கிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்வதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சித்தராமையா, மல்லிகார்ஜுன கார்கே, சிவக்குமார், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் தேவேகவுடா, குமாரசாமி, சிவராமலிங்க கவுடா ஆகியோர் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.
 
குமாரசாமிக்கு உதவும் வகையில் சபாநாயகர் ரமேஷ்குமார் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை இதுவரை ஏற்கவில்லை. ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள எம்.எல்.ஏ.க்கள் வரும் 17-ம் தேதிக்குள் நேரில் வந்து தன் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், வழக்கு தொடர்ந்த 10 எம்.எல்.ஏ.க்களும் இன்று மாலை 6 மணிக்குள் பெங்களூரில் சபாநாயகர் முன்பு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, ராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு இன்று மாலை நேரில் ஆஜராகினர்.
Tags:    

Similar News