செய்திகள்
மாநிலங்களவை

கர்நாடகத்தில் குதிரை பேரம்: மாநிலங்களவையில் கடும் அமளி - நாளைவரை ஒத்திவைப்பு

Published On 2019-07-09 09:08 GMT   |   Update On 2019-07-09 09:08 GMT
கர்நாடக மாநிலத்தின் அரசியல் விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாளைவரை ஒத்திவைக்கப்பட்டது.
புதுடெல்லி:

கர்நாடகாவில் காங்கிரஸ்- ஜேடிஎஸ் கூட்டணி அரசின் மீது அதிருப்தியில் உள்ள ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பதவி விலகினர். மந்திரிகளும் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய புயலை கிளப்பி உள்ளது.

ஆளும் கூட்டணி கட்சியினரிடையே கிளர்ச்சியை தூண்டிவிட்டதாகவும், எம்எல்ஏக்களை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
 
இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. கர்நாடக பிரச்சனை தொடர்பாக மாநிலங்களவையில் காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. அவையின் இன்றைய அலுவல்களை நிறுத்தி வைத்துவிட்டு, கர்நாடக பிரச்சனை குறித்து விவாதிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அதனை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.

இதனால், காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அவையில் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதேபோல் மேற்கு வங்க பிரச்சனையை முன்வைத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்களும், அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கமிட்டனர்.



இதையடுத்து அவையை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். 12 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்தது. எனவே, பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.

2 மணிக்கு பின்னர் அவை கூடியபோதும் இதேநிலை நீடித்ததால் நாளைவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
Tags:    

Similar News