செய்திகள்
சபரிமலை ஐயப்பன் கோவில்

சரண கோ‌ஷம் எழுப்புவதால் சபரிமலை காட்டில் ஒலி மாசு - கேரள வனத்துறை

Published On 2019-07-09 07:03 GMT   |   Update On 2019-07-09 07:03 GMT
சபரிமலை காடுகளில் பக்தர்கள் சரண கோ‌ஷம் எழுப்புவதால் ஒலி மாசு ஏற்படுவதாக கேரள வனத்துறை சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கேரளம், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து சென்று வழிபட்டு வருகிறார்கள்.

பெருவழிப்பாதை என்ற காட்டுப்பயணம் மட்டும் தான். அதேபோல் வருடத்துக்கு ஒருமுறைதான் நடைதிறப்பு என்று இருந்த வழக்கமான நடைமுறைகளை அந்த மாநில அரசு மாற்றியது. வருமானத்தை நினைத்து மாதம்தோறும் 5 நாட்கள் நடை திறப்பு, பம்பை வரை சாலை வசதி ஏற்படுத்தியது போன்ற பல வசதிகளை செய்தது. அதற்கு ஏற்ப பக்தர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது. வருமானமும் பல மடங்கு குவிகிறது.

ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல முடியாது. இந்த நடைமுறை பல ஆண்டுகாலமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தநிலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.

அதை அமல்படுத்துவதில் கேரள அரசு தீவிரம் காட்டியதால் ஏற்பட்ட சர்ச்சைகளும், போராட்டங்களும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சி படுதோல்வியை சந்தித்தது. தோல்விக்கு காரணம் ஐயப்பன் கோவில் பிரச்சினைதான் என்று அந்த கட்சியின் உயர்நிலை கூட்டத்திலேயே பேசப்பட்டது.

இப்போது அடுத்த சர்ச்சையை கேரள வனத்துறை தொடங்கி வைத்துள்ளது. மாநில வனத்துறை சார்பில் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பக்தர்களின் சரண கோ‌ஷம் சபரிமலை காடுகளில் ஒலி மாசுவை ஏற்படுத்துகிறது. ஒரு ஆண்டில் 50 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவதால் வன விலங்குகளின் அமைதியான வாழ்க்கை பாதிக்கிறது.



விறகு சேகரிப்பு, தற்காலிக கூடாரம் அமைக்க மரக்கிளைகள் வெட்டப்படுதல், பாலிதீன் குப்பை போன்றவையும் காடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. பக்தர்கள் காடுகள் வழியாக நடக்கும்போது உருவாகும் பாதையால் மண் அரிப்பு ஏற்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News