செய்திகள்
கர்நாடகா அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாஜக உள்ளது - மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாஜக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சிக்கு நியமன எம்.எல்.ஏ. உள்பட 225 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 120 பேரின் ஆதரவு இருந்து வருகிறது. இவர்களில் மந்திரி பதவி கிடைக்காமல் 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதை பயன்படுத்தி குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, 105 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜ.க. காய்களை நகர்த்துவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்கள் நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதற்கான கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் இல்லாத நிலையில், அவரது செயலாளரிடம் கொடுத்தனர்.
அதன்பின், அவர்களில் 10 பேர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்று மும்பை சோபிடெல் ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாஜக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த கூட்டணி தொடர வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்த சூழ்நிலையை சுமூகமாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டணிக்குள் குழப்பம் விளைவித்து எங்களை பிரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கர்நாடக அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பா.ஜ.க. உள்ளது என தெரிவித்துள்ளார்.