செய்திகள்
ஜம்மு காஷ்மீர் - பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்
ஜம்மு காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதன் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் இமாம் சாஹிப் பகுதியில் உள்ள பட்போர்-நர்வானி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு படையினரை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினரும் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதின் இயக்கத்தை சேர்ந்த சமீர் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து ஆயுதங்களும், வெடிமருந்தும் பறிமுதல் செய்யப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.