செய்திகள்
மும்பை மலாடில் சுவர் இடிந்த விபத்து - பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு
மும்பை தொடர் மழை காரணமாக பிம்பிரிபாடா பகுதியில் சுவர் இடிந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக, மும்பையில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் சாலைகளில் மேலும் மழைநீர் சேர்ந்து ஆறுபோல் காட்சியளித்தது. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மும்பையில் அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மும்பையின் மலாட் பகுதியில் பிம்பிரிபாடா என்ற இடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலியானதாக நேற்று முன்தினம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.