செய்திகள்
கேரளாவில் சாலை விபத்து - கோவையை சேர்ந்த 4 பேர் பலி
கேரளாவின் பாலக்காட்டில் நடைபெற்ற சாலை விபத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.
பாலக்காடு:
கோயம்புத்துர் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு நோக்கி ஆம்னி வேன் சென்றது. அதில் 12 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். பாலக்காடு அருகே சென்றபோது ஆம்னி வேன் மீது எதிரே வந்த லாரி வேகமாக மோதியது.
இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விசாரணையில், இவர்கள் கோவையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. தகவலறிந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 8 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.