செய்திகள்
அரசு பங்களாவை காலி செய்தார் சுஷ்மா
மத்திய முன்னாள் மந்திரி சுஷ்மா சுவராஜ் டெல்லியில் வசித்து வந்த அரசு பங்களாவில் இருந்து வெளியேறினார்.
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-வது முறையாக பதவி ஏற்றது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் சேர்ந்து 57 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
வெளியுறவுத் துறை அமைச்சராக பதவி வகித்த சுஷ்மா சுவராஜ், இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்.
இந்நிலையில், மத்திய முன்னாள் மந்திரி சுஷ்மா சுவராஜ் டெல்லியில் வசித்து வந்த அரசு பங்களாவில் இருந்து வெளியேறினார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், ‘‘கடந்த 5 ஆண்டுகளாக புதுடெல்லி, சப்தர்ஜங் லேனில் 8-ம் எண் கொண்ட அரசு வீட்டில் நான் வசித்து வந்தேன். தற்போது அந்த வீட்டை காலி செய்து விட்டேன். நான் முன்பு தங்கியிருந்த வீட்டு முகவரி மற்றும் தொலைபேசி எண்களில் இனி என்னை தொடர்பு கொள்ள இயலாது’’ என்று தெரிவித்துள்ளார்.