செய்திகள்

ஆந்திர விவசாயிகளுக்கு கொடுத்த வாக்கை இன்று நிறைவேற்றினார் ஜெகன் மோகன் ரெட்டி

Published On 2019-06-27 07:07 GMT   |   Update On 2019-06-27 10:29 GMT
ஆந்திராவில் விவசாயிகளுக்கு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரண்டாவது முறையாக இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அது என்ன என்பதை பார்ப்போம்.
அமராவதி:

ஆந்திர மாநில முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாகவும், அசத்தலாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதில் முதல் கோப்பாக சுகாதாரத்துறையில் பணிப்புரியும் ஆஷா பணியாளர்களின் ஊதியத்தினை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தினார்.

ஆந்திர காவல்துறையில் உள்ள காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவருக்கும் வார விடுமுறை வழங்கப்படும் என உத்தரவிட்டார்.

இதனையடுத்து 5 துணை முதல்வர்களை நாட்டிலேயே முதன்முறையாக நியமித்தார். 25 கேபினட் அமைச்சர்களையும் நியமனம் செய்தார். அடுத்த அதிரடியாக, வரும் செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வரும் என அறிவித்தார்.



விவசாயிகளுக்காக  'ரையத் பரோசா' எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் ஆண்டிற்கு ரூ.12,500 சலுகை பெறுவார்கள் என அறிவித்தார்.

ஏற்கனவே விவசாயிகளுக்காக சிறந்த திட்டம் கொண்டு வந்த ஜெகன் மோகன் ரெட்டி, இப்போது இரண்டாவது முறையாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  தேர்தல் பரப்புரையின்போது, விவசாயிகளுக்கு 9 மணி நேரம் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என கூறியிருந்தார்.

இது குறித்து குண்டூரில் நடந்த மின்சாரவாரிய கூட்டத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறுகையில், ‘ஜூன் 27ம் தேதி (இன்று) முதல் பகலில் 9 மணி நேரம் மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இரவில் 7 மணி நேரம் மட்டுமே வழங்கப்படுவதால், பலர் பாம்புக் கடி, விஷக்கடிக்கு ஆளாகி உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் இனி பகலில் 9 மணி நேரம்  மின்சாரம் இனி வழங்கப்படும்.

இதற்காக அரசு ரூ.1,700 கோடியை விடுவிக்கிறது’ என கூறினார்.  இந்த அறிவிப்பையடுத்து ஆந்திர விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Tags:    

Similar News