செய்திகள்
நகராட்சி பணியாளரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய விவகாரம் - பாஜக எம்எல்ஏ கைது
மத்திய பிரதேசம் மாநிலத்தில் நகராட்சி பணியாளரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய விவகாரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய் வர்கியாவை போலீசார் கைது செய்தனர்.
போபால்:
பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி மத்தியில் ஆளும் கட்சியாக பா.ஜ.க. இருந்து வருகிறது. அக்கட்சியின் தேசிய பொது செயலாளராக இருப்பவர் கைலாஷ் விஜய்வர்கியா. எம்.எல்.ஏ.வான இவரது மகன் ஆகாஷ் விஜய்வர்கியா.
மத்தியப்பிரதேசத்தில் நகராட்சி பணியாளர் ஒருவரை ஆகாஷ் கிரிக்கெட் பேட் ஒன்றை கொண்டு தாக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதில், ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருப்போர் மீது நடவடிக்கை எடுப்பதற்காக நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே அதிகாரி ஒருவரை ஆகாஷ் தாக்குகிறார். எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியபடி, நகராட்சி அதிகாரிகளை விரட்டி அடிக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், ம.பி.யில் நகராட்சி பணியாளரை தாக்கிய விவகாரம் தொடர்பாக ஆகாஷ் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆகாஷ் விஜய் வர்கியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.