திருப்பதியில் பலத்த மழை - ஊழியர்கள் ஓய்வறைக்குள் மழை நீர் புகுந்தது
திருமலை:
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் குளியலறை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பதியில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பக்தர்கள் தவித்து வந்தனர். கடும் வறட்சி காரணமாக திருப்பதியில் உள்ள அணைகள் வறண்டுவிட்டது. இதனால் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் தேவஸ்தானம் அதிகாரிகள் திணறி வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திருப்பதியில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை பலத்த மழை பெய்தது. சுமார் 3 மணிநேரம் கொட்டி தீர்த்தது.
இந்த மழையினால் லட்டு பிரசாதம் தயாரிக்கும் ஊழியர்களுக்காக நந்தகம் அருகே கட்டப்பட்டுள்ள வகுலமாதா ஓய்வறைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் ஓய்வறையில் ஊழியர்கள் தங்க முடியாமல் அவதி அடைந்தனர்.
ஓய்வறைக்குள் நிறுத்தி வைத்திருந்த பைக்குகளும் மழை நீரில் மூழ்கின. இதையடுத்து ஊழியர்கள் மழை நீரை வெளியேற்றினார்கள்.
திருப்பதியில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்காற்று வீசுகிறது.