செய்திகள்

எஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுத கொள்முதலை கைவிடும் எண்ணம் இல்லை: இந்தியா திட்டவட்டம்

Published On 2019-06-25 16:40 GMT   |   Update On 2019-06-25 16:40 GMT
ரஷியாவிடமிருந்து கொள்முதல் செய்யவிருக்கும் எஸ் 400 ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை எக்காரணம் கொண்டும் நிறுத்தப்போவதில்லை என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
 
இந்தியா- அமெரிக்கா இடையேயான பொருளாதார உறவில் சில கசப்புணர்வுகள் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இந்தியாவுக்கு இன்று வருகை தர உள்ளார்.  3 நாள் பயணமாக வரும் மைக், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். 

இந்த சந்திப்பின்போது, ரஷியாவிடமிருந்து இந்தியா வாங்கவிருக்கும் `எஸ் 400’ எனப்படும் ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை வாங்கும் முயற்சியை கைவிடவேண்டும் என மைக் பாம்பியோ வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில், ரஷியாவிடமிருந்து `எஸ் 400’ ஏவுகணை தடுப்பு ஆயுதத்தை வாங்கும் திட்டத்தை யாருடைய தலையீட்டின் காரணமாகவும் கைவிடும் எண்ணம் இல்லை என இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தியாவை பொறுத்தவரை ரஷியா மிகவும் நெருக்கமான மற்றும் நீண்டகால இராணுவ உபகரணங்கள் கொள்முதல் செய்யும் நாடாகவும் உள்ளது. இதனால் எத்தகைய காரணங்களாலும் இந்த கொள்முதல் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரையில் இருந்து வானில் 400 கி.மீ தொலைவில் வரும் எதிரி நாட்டு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் வல்லமை பெற்ற `எஸ் 400’ ஆயுதத்தை 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபர் புதினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவிடம் முழுவதும் ஒப்படைக்கப்படும் என ரஷியா தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News