செய்திகள்

மேற்கு வங்காளத்தில் பாஜகவினர் மீது தாக்குதல் - அமித்ஷாவிடம் ஆய்வறிக்கை தாக்கல்

Published On 2019-06-25 14:52 GMT   |   Update On 2019-06-25 14:52 GMT
மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜ.க.வினர் அடுத்தடுத்து தாக்கி கொல்லப்பட்டது தொடர்பாக ஆய்வுசெய்ய நியமிக்கப்பட்ட அலுவாலியா தலைமையிலான குழு இன்று உள்துறை மந்திரி அமித் ஷாவிடம் அறிக்கையை அளித்தது.
புதுடெல்லி:

மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜனதா- திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது.

இதற்கிடையே, 24 பர்கானாக்கள் மாவட்டம் பட்பாரா பகுதியில் நேற்று முன்தினம் இருதரப்பினர் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.



இதையடுத்து, வன்முறை சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. தலைவருமான அமித்ஷா உத்தரவிட்டார். இதற்காக மேற்கு வங்காள மாநில பா.ஜனதா எம்.பி. அலுவாலியா, சத்யபால் சிங் எம்.பி., பி.டிராம் ஆகிய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.

இதற்கிடையே, பா.ஜ.க. எம்.பி. அலுவாலியா தலைமையிலான குழுவினர் பட்பாரா பகுதியில் சமீபத்தில் ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.

இந்நிலையில், பட்பாராவில் பா.ஜ.க.வினர் அடுத்தடுத்து தாக்கி கொல்லப்பட்டது தொடர்பாக ஆய்வுசெய்த பா.ஜ.க. எம்.பி. அலுவாலியா தலைமையிலான குழுவினர் இன்று பா.ஜ.க. தேசிய தலைவரும், உள்துறை மந்திரியுமான அமித் ஷாவை சந்தித்தனர். அப்போது அவர்கள் பட்பாராவில் மக்களிடம் கேட்டறிந்த கருத்துக்களை தொகுத்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.
Tags:    

Similar News