செய்திகள்

தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு

Published On 2019-06-25 08:15 GMT   |   Update On 2019-06-25 08:15 GMT
தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறக்க கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட உத்தரவிடும்படி தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

‘கர்நாடகா அரசு தண்ணீர் வழங்காததாலும், நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 21-ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை. ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. நீரையும் கர்நாடக அரசு இன்னும் முழுமையாக வழங்கவில்லை. ஜூன், ஜூலையை தொடர்ந்து வரும் மாதங்களுக்கான நீரையும் சேர்த்து 31.24 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும்’ என தமிழகம் சார்பில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.



இந்த கூட்டத்தின் முடிவில், தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறக்க கர்நாடகத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி. நீரையும்  ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி நீரையும் முழுமையாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், மழை அளவு மற்றும் அணைக்கான நீர்வரத்தை பொறுத்து இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

Similar News