செய்திகள்
பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு
பீகாரில் பரவிவரும் மூளைக்காய்ச்சல் நோய் தொடர்பான வழக்கில் மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் மற்றும் பீகார் சுகாதாரத்துறை மந்திரி மங்கல் பாண்டே ஆகியோரிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து குழந்தைகளை தாக்கும் ‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என இரு வகையான மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 130 குழந்தைகள் பலியாகியுள்ளன. முசாபர்பூரில் மட்டும் 100க்கும் அதிகமான குழந்தைகள் மூளைக் காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவ்விவகாரத்தில் பீகார் மாநில அரசும், மத்திய அரசும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின.
இதனிடையே மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் மற்றும் பீகார் சுகாதாரத்துறை மந்திரி மங்கல் பாண்டே ஆகியோரின் அலட்சியத்தால் தான் இத்தகைய பேரிழப்பு நிகழ்ந்ததாக கூறி முசாபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் தமன்னா ஹாசினி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் மற்றும் பீகார் சுகாதாரத்துறை மந்திரி மங்கல் பாண்டே ஆகியோரிடம் விசாரணை நடத்த நீதிபதி உத்தரவிட்டார்.