செய்திகள்

இந்தியாவில் இந்த ஆண்டில் இதுவரை மழைப்பொழிவு 39 சதவீதம் குறைவு

Published On 2019-06-23 13:26 GMT   |   Update On 2019-06-23 13:26 GMT
இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதி வரை பெய்த மழையை விட இந்த ஆண்டில் நேற்று வரை பெய்துள்ள மழைப்பொழிவு 39.3 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி:

புவி வெப்ப மயமாதல் மற்றும் பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த காரணங்களால் இனிவரும் காலங்களில் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் மழை குறைவினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அதற்கேற்ப, இந்தியா உள்ளிட்ட சில ஆசிய நாடுகளில் வருடாந்திர மழைப்பொழிவு மிகவும் குறைந்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதிவரை பெய்த மழையை விட இந்த ஆண்டில் நேற்று வரை பெய்துள்ள மழைப்பொழிவு 39 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் ஜூன் முதல் தேதியில் இருந்து 22-ம் தேதி வரை நாடு முழுவதும் 107.1 மில்லிமீட்டர் மழை பெய்திருந்தது. ஆனால், இந்த ஆண்டின் இதே மாதம் மற்றும் தேதியின்படி மழைப்பொழிவு 39.3  சதவீதம் குறைந்து 65 மில்லிமீட்டர் என்ற அளவில்தான் உள்ளது என இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
Tags:    

Similar News