செய்திகள்
போலீசார் வானை நோக்கி சுட்ட தோட்டாக்கள் பாஜகவினர் உடலில் பாய்ந்தது எப்படி? - அலுவாலியா
மேற்கு வங்காள போலீசார் வானை நோக்கி சுட்ட தோட்டாக்கள் பா.ஜ.க.வினர் உடலில் பாய்ந்தது எப்படி? என பா.ஜ.க. எம்.பி. அலுவாலியா கேள்வி எழுப்பியுள்ளார்.
கொல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலத்தில் பா.ஜனதா- திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது.
இதற்கிடையே, 24 பர்கானாக்கள் மாவட்டம் பட்பாரா பகுதியில் நேற்று முன்தினம் இருதரப்பினர் வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் மோதலில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, வன்முறை சம்பவங்களை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. தலைவருமான அமித்ஷா உத்தரவிட்டார். இதற்காக மேற்கு வங்காள மாநில பா.ஜனதா எம்.பி. அலுவாலியா, சத்யபால் சிங் எம்.பி., பி.டிராம் ஆகிய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தார்.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.பி. அலுவாலியா தலைமையிலான குழுவினர் பட்பாரா பகுதியில் இன்று ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
இதுதொடர்பாக, பாஜக எம்பி அலுவாலியா செய்தியாளர்களிடம் கூறுகையில், கடையில் பொருள் வாங்க சென்ற 17 வயது சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து இறந்துள்ளான். மற்றொரு வியாபாரியும் சுடப்பட்டு இறந்துள்ளார். போலீசார் குண்டர்களிடம் லத்தியையும், அப்பாவிகளிடம் தோட்டாக்களையும் பயன்படுத்துகின்றனர்.
செய்தியாளர் சந்திப்பின்போது போலீசார் வானை நோக்கி சுட்டனர் என தெரிவித்துள்ளனர். ஆனால் வானை நோக்கி சுட்ட தோட்டாக்கள் அவர்களின் உடல்களில் வந்தது எப்படி? என்பதை அவர்கள் விளக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த குழுவினர் சென்ற இடத்தில் இன்று பிற்பகல் மீண்டும் கலவரம் வெடித்தது. கற்கள்,கையெறி குண்டுகள் வீசப்பட்டன. கலவரத்தை தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர்.