செய்திகள்
இமாச்சல் பஸ் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரஷியா அதிபர் புதின் இரங்கல்
இமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பேருந்து விபத்தில் உயிரிழந்த 44 பேரின் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இமாச்சல பிரதேச மாநிலம் குல்லு மாவட்டத்தின் பஞ்ஜார் பகுதியிலிருந்து 50க்கு மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கடகுஷானி என்ற இடத்திற்கு தனியாருக்கு சொந்தமான பஸ் நேற்று சென்றது. பஞ்ஜார் பகுதியில் உள்ள மலைப்பாங்கான கோர்ச் என்ற பகுதியை கடக்கும்போது எதிர்பாராத விதமாக அருகிலுள்ள பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விழுந்தது.
இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது என மீட்புப்படையினர் தெரிவித்தனர். விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என மாநில முதல் மந்திரி ஜெய்ராம் தாக்குர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பேருந்து விபத்தில் உயிரிழந்த 44 பேரின் குடும்பத்தினருக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது இரங்கலை தெரிவித்தார். அப்போது, பஸ் விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.