செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் - காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

Published On 2019-06-19 09:52 GMT   |   Update On 2019-06-19 09:52 GMT
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம்.
 
ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துகிறபோது பண இழப்பு, நேரம் வீணாவது குறையும் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஆனாலும், ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் அனைத்துக் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.

இதுகுறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டியுள்ளார். அவரது தலைமையில் நடக்கிற கூட்டத்துக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோ‌ஷி அழைப்பு அனுப்பி உள்ளார்.



இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

காங்கிரஸ், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளன.
Tags:    

Similar News