செய்திகள்

ரெயில்களை தனியார் இயக்க அனுமதி - மத்திய அரசு முடிவு

Published On 2019-06-19 06:09 GMT   |   Update On 2019-06-19 07:00 GMT
பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத பயணிகள் ரெயிலையும், சுற்றுலா ரெயிலையும் தனியார் இயக்க மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளது.
புதுடெல்லி:

பயணிகள் போக்குவரத்தில் பஸ், விமானம், கப்பல் சேவைகளில் அரசு மட்டுமின்றி தனியாருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய ரெயில்வே போக்குவரத்தில் மட்டும் தனியாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ரெயில்வே அமைச்சகமும் தனி பட்ஜெட் தயாரித்து, அந்த போக்குவரத்து சேவையை மேற்கொண்டுள்ளது.

உலகின் 4-வது பெரிய ரெயில்சேவையான இந்தியன் ரெயில்வேயில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். 69 ஆயிரத்து 182 கி.மீ. தொலைவுக்கு இருப்புபாதையை கொண்ட இந்திய ரெயில்வே தினமும் நூற்றுக்கணக்கான ரெயில்வே சேவைகளை இயக்கி வருகிறது.

பல கோடி பேர் தினமும் ரெயில் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். பெரும்பாலான சரக்கு போக்குவரத்தும் ரெயில்கள் மூலம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்திய ரெயில் வேக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்கிறது.

எதிர்காலத்தில் மேலும் பல புதிய வழித்தடங்கள் அமைத்து வருவாயை பெருக்க முடிவு செய்துள்ளனர். அதிவேக ரெயில் சேவைகளையும் கொண்டு வர உள்ளனர்.

இந்த திட்டங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதைத்தொடர்ந்து ரெயில்வேக்கு எந்தெந்த வழிகளில் வருவாயை அதிகரிக்க முடியும் என்று ஆய்வு நடந்து வருகிறது.

அந்த அடிப்படையில் பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத அதாவது வருவாய் அதிகம் இல்லாத பயணிகள் ரெயில் சேவைகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அது போல குறைந்த வருவாயை தரும் சுற்றுலாதலங்களுக்கு இயக்கப்படும் ரெயில் சேவைகளையும் தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 100 நாட்களுக்குள் இது தொடர்பான ஏலத்தொகைக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக ஏலத்தொகை கேட்கும் தனியாருக்கு, பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத ரெயில் சேவையை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக பயணிகள் கூட்டம் அதிகம் இல்லாத ஒரு பயணிகள் ரெயிலையும், ஒரு சுற்றுலா ரெயிலையும் தனியார் இயக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. அடுத்து ரெயில் சேவையை இயக்க வாய்ப்பு வழங்கப்படும். அந்த தனியார், அந்த ரெயிலுக்கு புதிய பெயரை சூட்டிக் கொள்ளலாம். ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் வாடகை அடிப்படையில் தனியாருக்கு வழங்கப்படும்.

அந்த ரெயில்வே பெட்டிகள் ஐ.ஆர்.சி.டி.சி பொறுப்பில் விடப்படும் டிக்கெட் விற்பனையும் ஐ.ஆர்.சி.டி.சி மூலமாகவே நடைபெறும். இந்த திட்டத்தால் தனியார் ரெயில்களை இயக்குவதோடு, ரெயில்வே அமைச்சகத்துக்கும் அதிகப்படியான லாபம் கிடைக்கும்.

முக்கிய நகரங்களை இணைக்கும் நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஒன்று தனியாருக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News