செய்திகள்

நகைக்கடை மோசடி: முதலீட்டாளர்களின் பணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை-குமாரசாமி

Published On 2019-06-19 02:18 GMT   |   Update On 2019-06-19 02:18 GMT
நகைக்கடை மோசடி விவகாரத்தில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.
ராமநகர் :

பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள ஒரு நகைக்கடை நிறுவனம், பொதுமக்களிடம் முதலீடு என்ற பெயரில் பணம் வசூலித்து ரூ.1,230 கோடி மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அந்த நிறுவனத்தின் அதிபர், வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த மோசடியில் அரசியல்வாதிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து ராமநகர் தாலுகா கன்வா கிராமத்தில் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நகைக்கடை மோசடி குறித்து சிறப்பு விசாரணை குழு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை குறித்த தகவல்களை சொல்ல முடியாது. இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டுள்ள முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுகுறித்து தலைமை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோர் அடங்கிய உயர்நிலை கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளேன். இதில் முதலீட்டாளர்களை காப்பாற்ற கடுமையான முடிவு எடுக்கப்படும். முதலீட்டாளர்கள் யாரும் பயப்பட தேவை இல்லை.

இதில் தொடர்பு உடையவர்களை பாதுகாக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News