செய்திகள்

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து ஆலோசனை - டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம்

Published On 2019-06-18 23:27 GMT   |   Update On 2019-06-18 23:27 GMT
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம்.

ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துகிறபோது கீழ்க்காணும் நன்மைகள் கிடைக்கும்.

* அடிக்கடி தேர்தலை சந்திப்பதால் ஏற்படும் பண இழப்பு தவிர்க்கப்படுகிறது.

* அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்களை அவ்வப்போது தேர்தல் பணிக்கு அமர்த்தும் நிலையை குறைத்துக்கொள்ள முடியும்.

* அடிக்கடி தேர்தல் நடத்துவதால் ஏற்படுகிற நேரம் வீணாவது தவிர்க்கப்பட்டு விடும்.

* நாட்டிலும், எல்லையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிற பாதுகாப்பு படையினரை தேர்தல் பணிகளில் அடிக்கடி ஈடுபடுத்தும் நிலை வராது.

* அடிக்கடி தேர்தல் வருகிறபோது, நடத்தை விதிகளை அமல்படுத்துவதால் புதிய வளர்ச்சித்திட்டங்களை அறிவிப்பதிலும், வளர்ச்சிப்பணிகளை தொடங்குவதிலும் தடங்கல்கள் ஏற்படும்.

இப்படி ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தும் முடிவில் பிரச்சினைகளும் உள்ளன.

* ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் அனைத்துக்கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.

* அரசியல் சாசன சட்டத்தை திருத்த வேண்டிய தேவை எழும்.

இது தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று (புதன்கிழமை) அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி உள்ளார்.

அவரது தலைமையில் நடக்கிற கூட்டத்துக்கு, பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள அனைத்துக்கட்சிகளின் தலைவர்களுக்கும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோ‌ஷி அழைப்பு அனுப்பி உள்ளார்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கூட்டம் நடக்கிறது.

இதில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று சொல்கிற விதத்தில் பாராளுமன்றத்துக்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு தெரியவந்து விடும்.

இந்த கூட்டத்தில், 2022-ம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவது பற்றியும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து விவாதிக்கப்படும்.

இந்த கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி புறக்கணிக்கிறார். இது தொடர்பாக அவர் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோ‌ஷிக்கு நேற்று ஒரு அவசர கடிதம் எழுதினார்.

அதில் அவர் ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் அவசர அவசரமாக முடிவு எடுக்காமல், அதற்கு பதிலாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் நேற்று நடந்தது. இதில் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர்.
Tags:    

Similar News