செய்திகள்

அயோத்தி பயங்கரவாத தாக்குதல் வழக்கு- 4 பேருக்கு ஆயுள் தண்டனை

Published On 2019-06-18 10:35 GMT   |   Update On 2019-06-18 10:35 GMT
14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி பயங்கரவாத தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பிரயாக்ராஜ் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பிரயாக்ராஜ்:

அயோத்தியில் கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பலத்த பாதுகாப்பு நிறைந்த ராம ஜென்ம பூமி, பாபர் மசூதி வளாகத்திற்குள் பயங்கரவாதிகள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். கையெறி குண்டுகள் வீசி, பாதுகாப்பு வேலியை தாண்டி உள்ளே வந்த அவர்கள் துப்பாக்கியால் சுட்டபடி முன்னேறினர். அவர்களை முன்னேற விடாமல், பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சண்டையில், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 5 பேரும் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் தரப்பில் 2 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. 



இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது பிரயாக்ராஜில் (அலகாபாத்) உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசுத்தரப்பில் 63 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

14 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்துவிட்டன. இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒருவர் விடுவிக்கப்பட்டார். 
Tags:    

Similar News