செய்திகள்

வயநாடு அருகே 100 நாள் வேலையின்போது இளம்பெண் வெட்டிக்கொலை

Published On 2019-06-18 09:50 GMT   |   Update On 2019-06-18 09:50 GMT
வயநாடு அருகே 100 நாள் வேலையின் போது இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி அருகே உள்ளது தம்பித்தான் கிராம பஞ்சாயத்து.

இங்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வந்தவர் சினி (வயது 35). நேற்று அதே பகுதியில் 50-க்கும் மேற்பட்டோருடன் வேலை பார்த்து வந்தார். வேலையின்போது சினிக்கும் அவரது மாமன் முறையான தேவசி (50) என்பருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேவசியும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்பவர்.

இந்நிலையில் பிற்பகல் வேலையின்போது இடைவெளி விடப்பட்டது. வேலையாட்கள் அங்கு டீ குடித்தனர். ஆனால் சினி அருகில் உள்ள தனது வீட்டுக்கு சென்று டீ குடிப்பதாக கூறிச் சென்றார்.

வெகுநேரமாகியும் சினி வேலைக்கு திரும்பவில்லை. மற்ற ஊழியர்கள் சினியை தேடி அவரது வீட்டுக்கு சென்றனர். வீட்டில் சினி கழுத்து வெட்டப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து மானந்தவாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சினியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

சினிக்கும், அவரது மாமன் தேவசிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் சினி கொலை செய்யப்பட்டார். தேவசியும் மாயமாகி விட்டதால் அவர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று அங்கு வேலை செய்தவர்கள் புகார் செய்தனர்.

புகார் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவசியை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News