செய்திகள்

மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்ககோரிய மனு- அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

Published On 2019-06-18 06:35 GMT   |   Update On 2019-06-18 06:35 GMT
மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள என்.ஆர்.எஸ். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த 10-ந் தேதி உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் அங்கு பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை தாக்கினர். இதை கண்டித்து 11-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சுகாதார சேவை மிகவும் பாதிக்கப்பட்டது. கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த மருத்துவர்கள் போராட்டம் நேற்று முடிவுக்கு வந்தது. நேற்று கொல்கத்தாவில் மம்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் போராட்டத்தை கைவிடுவதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.



இதனிடையே நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு நீதிமன்றம் மீண்டும் திறக்கப்பட்டவுடன் வழக்கு விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News