செய்திகள்

நாட்டை விட்டு நான் ஓடவில்லை, சிகிச்சைக்காகவே வெளிநாடு வந்தேன் - மெகுல் சோக்சி புதிய விளக்கம்

Published On 2019-06-17 13:43 GMT   |   Update On 2019-06-17 13:43 GMT
சுமார் 13 ஆயிரம் ரூபாய் கடன் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் மெகுல் சோக்சி, நான் நாட்டை விட்டு ஓடவில்லை, சிகிச்சைக்காகவே வெளிநாடு வந்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
மும்பை:

பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் மட்டும் 11,400 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று, மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் தலைமறைவாக பதுங்கியுள்ளார். இவரது பாஸ்போர்ட்டை முடக்கி இந்தியாவுக்கு அழைத்து வர அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவிட்டும், தொழில் ரீதியான வேலைகள் இருப்பதால் ஆஜராக முடியாது என மின்னஞ்சல் மூலம் முன்னர் தகவல் அனுப்பினார்.

இதைதொடர்ந்து, மெகுல் சோக்சிக்கு எதிராக ஜாமினில் விடுவிக்க முடியாத கைது வாரண்ட்டை மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பித்தது. 

இந்நிலையில், மும்பை உயர்நீதி மன்றத்தில் புதிதாக ஒரு பிரமாணப் பத்திரத்தை மெகுல் சோக்சி தற்போது  தாக்கல் செய்துள்ளார்.

தனக்குள்ள நோய்கள் தொடர்பான டாக்டர்களின் அறிக்கைகளை எல்லாம் பட்டியலாக தயாரித்து பிரமாணப் பத்திரத்தில் இணைத்துள்ள அவர், நான் நாட்டை விட்டு ஓடிப்போகவில்லை. மருத்துவ சிகிச்சைக்காகவே வெளிநாடு வந்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஆன்ட்டிகுவா நாட்டில் தங்கியுள்ள நான் இந்திய அரசு அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். இந்தியாவுக்கு வந்து விசாரணைக்கு ஆஜராகவே நான் விரும்புகிறேன். ஆனால், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள எனது உடல்நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை.

எனவே, எனது கோரிக்கையை இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால் அதிகாரிகளை ஆன்ட்டிகுவா நாட்டுக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது, வீடியோ கான்பிரன்சிங் மூலமாகவும் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகவும் சம்மதிக்கிறேன். 

பயணம் செய்யும் அளவுக்கு எனது உடல்நிலை சீரடைந்த பின்னர் இந்தியாவுக்கு திரும்பி வருவேன் என தனது பிரமாணப் பத்திரத்தில் மெகுல் சோக்சி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News