செய்திகள்

பீகாரில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரிப்பு

Published On 2019-06-17 05:49 GMT   |   Update On 2019-06-17 05:49 GMT
பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது, இதற்கு பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.
பாட்னா:

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. இதில் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்திருந்தனர்.

ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு வரை 43 குழந்தைகள் பலியாகி இருந்தனர். நோய் பாதிப்பால் 117 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

‘அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம்’ மற்றும் ‘ஜப்பான் என்சபிலிட்டிஸ்’ என 2 வகையான மூளைக்காய்ச்சல் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் முசாபர்பூர் பகுதியில் அக்யூட் என்சபிலிட்டிஸ் சிண்ட்ரோம் மூளைக்காய்ச்சலும், கயா பகுதியில் ஜப்பான் என்சபிலிட்டிஸ் மூளைக்காய்ச்சலும் பரவி இருக்கிறது.


 
இதைத் தொடர்ந்து நிலைமையை ஆராய மத்திய நிபுணர் குழு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்துவதுடன் சிகிச்சைகளும் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதற்கிடையே பீகாரின் முசாபர்பூர் கிருஷ்ணா மருத்துவமனையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் நேற்று ஆய்வு செய்தார். உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

இந்நிலையில், முசாபர்பூர் மாவட்டத்தில் மூளை காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 100 ஆக  உயர்ந்துள்ளது. இதுவரை 100 பேர் பலியாகியுள்ளதாக ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனை கண்காணிப்பாளர்  சுனில் குமார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News