செய்திகள்
ஜம்மு-காஷ்மீர் முஸ்லிம் லீக் கட்சி பொதுச் செயலாளர் கைது
தலைமறைவாக இருந்த ஜம்மு-காஷ்மீர் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் முஹம்மது ரபிக் கனி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் பலரை தங்களது பேச்சுகளின் மூலம் மூளைச்சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றி வருகின்றனர்.
அவ்வகையில், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசிவந்த ஜம்மு-காஷ்மீர் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர் முஹம்மது ரபிக் கனி என்பவரை கைது செய்த போலீசார் தேடி வந்தனர்.
சட்டப்புறம்பான பல செயல்களில் ஈடுபட்டதாகவும் இவருக்கு எதிராக சில வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், பாரமுல்லா மாவட்டத்துக்குட்பட்ட மகாம் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முஹம்மது ரபிக் கனி பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, விரைந்து சென்ற போலீசார் நேற்றிரவு அந்த வீட்டை முற்றுகையிட்டு அவரை கைது செய்தனர்.