செய்திகள்
இது வாயு புயலின் போது எடுக்கப்பட்டதா? வைரல் புகைப்படத்தின் பின்னணி
ஃபேஸ்புக்கில் வைரலாகி இருக்கும் புகைப்படம் வாயு புயலின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் உண்மை பின்னணியை பார்ப்போம்.
அரபிக் கடலில் உருவான வாயு புயல் அதிதீவிர புயலாக மாறி குஜராத் மாநிலத்தை அச்சுறுத்தி வந்தது. புயல் தீவிரம் காட்டும் முன் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டது.
வாயு புயல் பற்றிய செய்திகள் மற்றும் விவரங்கள் அதிகம் பகிரப்பட்ட நிலையில், ஃபேஸ்புக்கில் புகைப்படம் ஒன்று வைரலாகி இருக்கிறது. வைரல் புகைப்படம் மும்பையில் எடுக்கப்பட்டதாகவும், வாயு புயல் மும்பையை கடக்கும் காட்சி இது என்றும் கூறப்படுகிறது.
அந்த புகைப்படத்தின் தலைப்பில் மும்பை கறையை வாயு புயல் தாக்குகிறது. அபாய நிலை உருவாகி இருக்கிறது. பாதுகாப்பு எச்சரிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தலைப்புடன் கூடிய புகைப்படத்தை பலரும் தங்களது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்.
உண்மையில் வைரலாகும் புகைப்படத்தை இணையத்தில் தேடும் போது வைரலான புகைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி ஷட்டர்ஸ்டாக் எனும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனை துஷார் கராபெ என்பவர் அந்த தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
இவர் தனது புகைப்படத்திற்கு இந்திய வானிலை சுற்றுச்சூழல் எனும் தலைப்பை சூட்டியிருக்கிறார். இதுதவிர இந்த புகைப்படத்தை அவர் எங்கு எடுத்தார் என்பது பற்றி எவ்வித தகவலையும் அவர் வழங்கவில்லை. எனினும், புகைப்படத்தை பார்க்கும் போது, இது மும்பையின் மெரைன் டிரைவில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.