செய்திகள்

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வுப் பணியை தொடங்கியது கேரளா

Published On 2019-06-13 05:27 GMT   |   Update On 2019-06-13 05:27 GMT
தமிழகத்தின் எதிர்ப்பை மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணியை கேரள அரசு தொடங்கியுள்ளது.
திருவனந்தபுரம்:

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான தீவிர முயற்சியில் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. மேலும் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் வாகன நிறுத்த மையம் அமைக்கவும் முடிவு செய்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வாகன நிறுத்த மைய கட்டுமானப் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது.

இதனிடையே முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை ஜூலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அணையின் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ள கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது.



ஆனால் முல்லைப் பெரியாறு, புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் கேரள மாநில வனத்துறையின் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த மாதம் ஆய்வுக்கான அனுமதியை வனத்துறை தலைமை காப்பாளர் வழங்கினார்.

இதன் எதிரொலியாக, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வுப் பணியை கேரள அரசு தொடங்கியுள்ளது. தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு ஆய்வுப்பணிகளை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News